

ஜன. 9-ல் ஜன நாயகன் திரைப்படம் வெளியீடு இல்லை என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள “ஜன நாயகன்” திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அவர் நாயகனாக நடிக்கும் கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, உடனடியாக தணிக்கைச் சான்றிதழை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்தது.
இந்த விவகாரத்தில் ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ஆம் தேதி வெளியீடு இல்லை என பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டை கனத்தை இதயத்துடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாக்கி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.