

சென்னை: வரும் 15ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அரசுப் பேருந்துகள் மூலம் சுமார் 1.21 லட்சம் பேர் நேற்று சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் ஜன. 9 -ஆம் தேதி முதல் இயக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒட்டுமொத்தமாக இயக்கப்பட்ட 2,706 பேருந்துகளில் 1,21,770 பேர் சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அடுத்து வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 614 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, ஜன. 09 அன்று நள்ளிரவு நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 614 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 2,706 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,21,770 பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இதுவரை சென்னையிலிருந்து 1,16,977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் திருநாள் பயண காலத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். எனவே பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.