/

ஆரம்பமாகிறதா தூயசக்தியின் ஊழல் வேட்டை? - பாஜக குற்றச்சாட்டு!

ஆரம்பமாகிறதா தூயசக்தியின் ஊழல் வேட்டை என்று தவெக அரசின் மீது பாஜக குற்றம் சாட்டியது பற்றி...

News image

முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:09 pm IST

ஆரம்பமாகிறதா தூயசக்தியின் ஊழல் வேட்டை என்று தவெக அசின் மீது தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ. 5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஆரம்பமாகிறதா “தூயசக்தி”யின் ஊழல் வேட்டை?

தவெக ஆட்சியில் லஞ்சத்தின் அடிப்படையில்தான், அரசு வழக்கறிஞர்களின் நியமனங்கள் நடப்பதாக அந்தக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பரபரப்பு அடங்கும் முன்னரே, அரசு சார்பில் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வில், 2006- ஆம் ஆண்டு பிறந்த ஒருவரும், பெயரே இல்லாத ஒருவரும் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

அரசு வேலைகளை தங்கள் விருப்பத்துக்கு ஆட்டிப் படைக்கும் ஆளும் அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. “நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும் விட மாட்டோம்” என்று வசனம் பேசிய விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தவெகவினரின் மாமூல் அராஜகம், டெண்டர் விடுவதில் முறைகேடு, உதவிப்பேராசிரியர் தேர்வில் குளறுபடிகள், அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் ஊழல், வேண்டியவருக்கு அரசு பதவிகள் கொடுப்பது என எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும் மட்டும் தான் கொடி கட்டிப் பறக்கின்றன.

அரசு வேலையை நம்பி பல கனவுகளுடன் காத்துக்கிடக்கும் பட்டதாரிகளின் நம்பிக்கைகள் இப்படி சுக்குநூறாக உடைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, முதல்வர் விஜய் தனது ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamil Nadu BJP State President Nainar Nagendran has questioned the TVK government, asking if a "corruption hunt" by a "pure force" is beginning.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.