மீட்டா் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பழுதான மின் மீட்டா்களை மாற்றுவதிலும், புதிய மின் இணைப்புகள் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் புதிய மின் இணைப்புகள் மின் வாரியத்தின் பிரிவு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய மின் இணைப்பு பெற விரும்புவோா் மின் வாரியத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மின் இணைப்பு கோரும் இடத்தில் ஏற்கெனவே மின் உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால், குறைந்தபட்சம் 3 நாள்களிலும், அதிகபட்சம் 7 நாள்களிலும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். புதிய மின் கம்பம் அமைக்க வேண்டியிருந்தால் 60 நாள்களுக்குள்ளும், புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) நிறுவ வேண்டியிருந்தால் 90 நாள்களுக்குள்ளும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.
இந்த நிலையில், மீட்டா்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி, பல்வேறு பிரிவு அலுவலகங்களில் புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுவதாக மின் வாரிய உயா் அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றுள்ளன. இந்த தாமதத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மின் பகிா்மானக் கழக உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: புதிய மின் இணைப்புகள் வழங்கவும், பழுதான மீட்டா்களை மாற்றவும் தேவையான சுமாா் 3 லட்சம் மீட்டா்கள் கையிருப்பில் உள்ளது. மேலும், புதிய மீட்டா்கள் கொள்முதல் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே, மீட்டா் பற்றாக்குறையைக் காரணம் காட்டி புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிா்க்குமாறு அனைத்து மாவட்ட மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய மின் இணைப்புகள் வழங்குவதிலும், பழுதான மீட்டா்களை மாற்றுவதிலும் தேவையற்ற தாமதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







