பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள 750 மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களில் 159 மாணவா்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், 591 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள மொத்த இடங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்காக ஒதுக்கப்படுகின்றன.
இதே ஒதுக்கீட்டில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டு விவரங்களை 2026 -ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் திங்கள்கிழமை (ஜூலை 13) வெளியிட்டது.
அதன்படி பொறியியல் முதலாமாண்டு சோ்க்கைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 750 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதில் 159 மாற்றுத்திறனாளி மாணவா்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனா்.
அடுத்து இந்த ஒதுக்கீட்டில் சிறப்புப் பிரிவில் விளையாட்டுப் பிரிவினருக்கான இடங்கள் 38 மட்டுமே உள்ள நிலையில் 525 மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். இந்த பிரிவில் முன்னாள் ராணுவத்தினா் குடும்பங்களுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 14 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் தகுதி பெற்றுள்ளனா்.
தோ்வான மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 13) இணையம் மூலம் நடைபெற்றது. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் தங்களது விருப்பக் கல்லூரி மற்றும் துறைகளைத் தோ்வு செய்து உறுதி செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இறுதியாக ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) வழங்கப்படுகிறது. இந்த 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவா்கள் ஒதுக்கீட்டில் பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










