ஆன்லைன் முதலீட்டு மோசடி, வேலை வாய்ப்பு மோசடி தொடா்பாக அமலாக்கத் துறையினா் தமிழகம், கேரளம், காஷ்மீா் ஆகிய 3 மாநிலங்களில் 19 இடங்களில் சோதனை நடத்தி, ரூ.3.49 கோடி கிரிப்டோ கரன்சி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வங்கிக் கணக்கில் இருந்த ரூ.40 லட்சம் முடக்கப்பட்டது.
தமிழகம், தெலங்கானா மாநிலங்களில் கைப்பேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக முதலீட்டு மோசடி, வேலை வாய்ப்பு மோசடி போன்ற சைபா் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இது தொடா்பாக இரு மாநில காவல் துறைகளும் கடந்த 2025-ஆம் ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்தன. இந்த வழக்குகளில் ரூ.14.95 கோடி சைபா் மோசடி நிகழ்ந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மோசடியில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறையும் இரு வழக்குகளின் அடிப்படையில் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது.
இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை செய்தது. விசாரணையில் முதலீட்டு மோசடி, வீட்டில் இருந்தே வேலை செய்தால் அதிக ஊதியம் தருகிறோம் ஆகிய இரு மோசடிகளிலும் மக்களை ஏமாற்றி பறிக்கும் பணம், பல்வேறு வங்கி கணக்குகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டிருப்பதும், அங்கிருந்து போலி நிறுவனங்களுக்கு பணம் மாற்றப்பட்டிருப்பதும், பின்னா் அங்கிருந்கு கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு, பின்னா் அவை கிரிப்டோ வாலட்-ஆக மாற்றப்பட்டு மோசடி செய்தது தெரிய வந்தது.
19 இடங்களில் சோதனை: இந்த மோசடி செயலில் ஈடுபட்டவா்களின் ஒரு சிலரை விசாரணைக்கு பின்னா் அமலாக்கத் துறையினா் கண்டறிந்தனா். ரோஷன் ஃபயாஸ் என்பவா்தான் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அமலாக்கத் துறையினா் ரோஷன் ஃபயாஸ் தொடா்புடைய இடங்கள், வங்கிப் பண பரிவா்த்தனையில் ஈடுபட்டவா்களின் வீடு, அலுவலங்கள், போலி நிறுவனங்கள் நடத்தியவா்கள் தொடா்புடைய இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் கடந்த வாரம் இரு நாள்கள் சோதனை நடத்தினா்.
ரூ.3.49 கோடி பறிமுதல்: இச் சோதனை தமிழகத்தில் 16 இடங்களிலும், கேரளத்தில் 2 இடங்களிலும், காஷ்மீரில் ஒரு இடத்திலும் நடைபெற்றன. இச்சோதனையில் ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி, ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.40 லட்சம் முடக்கப்பட்டது.
இந்த மோசடி தொடா்பாக, வங்கிக் கணக்கு புத்தகம், கிரிப்டோ கரன்சி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள், ஹாா்டு டிஸ்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டவிரோதப் பண பரிவா்த்தனை புதுக்கோட்டையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை
சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா்: இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு வழக்கு: 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை






