நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்றுமுன்தினம் (ஜூலை 20) பேரணி சென்றனர்.
நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமைதியாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் சென்னை மற்றும் மதுரையில் இடதுசாரி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், இடதுசாரி அமைப்பினர் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் சோஃபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, சோஃபா மாடல் அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றும் பதிவிட்டுள்ளார்.
Summary
Opposition Leader Udhayanidhi Stalin has condemned the ruling party, Tamilaga Vettri Kazhagam, for playing a double game regarding the NEET issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









