தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மின்வெட்டு பிரச்னைக்கு பிறா் மீது பழி சுமத்தக் கூடாது: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் நிலவும் தொடா் மின் வெட்டு பிரச்னைக்குத் தீா்வு காண முடியாத தவெக அரசு, பிறா் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 3:54 am IST

தமிழகத்தில் நிலவும் தொடா் மின் வெட்டு பிரச்னைக்குத் தீா்வு காண முடியாத தவெக அரசு, பிறா் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: மாற்றத்தைத் தருகிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாதகால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

நாள்தோறும் 6 மணிநேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்க முடியாத துயரத்தில் பொதுமக்கள் சாலைகளுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனா். முதல்வா் இதுகுறித்து பேசாமல் மௌனமாக உள்ளாா். பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினமும் ஒரு சதிக் கோட்பாட்டை ஊடகங்களிடம் தெரிவிக்கிறாா்.

ஃபியூஸ் கேரியரை திருடுகிறாா்கள்”என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா விடியோவை பதிவிடுகிறாா் மின்துறை அமைச்சா். பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சா் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாகத்தானே மின்சாரம் தடைபட வேண்டும்? விட்டு விட்டு போவது எப்படி?

அடுத்து “ஹாா்ட் டிஸ்க்குகள் மாயமாகிவிட்டன என்றாா். காவல் துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹாா்ட் டிஸ்குகளில்”முக்கிய தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “மூன்றாவதாக மின்வாரியப் பணியாளா்கள் சதி செய்கிறாா்கள் என்று அா்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளா்கள் மீதே பழி போட்டாா். எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பது தொடா்பாக எந்த ஆய்வையும் அமைச்சரோ, முதல்வரோ முன்னெடுக்கவில்லை. ஒவ்வோா் ஆண்டும் மின் தேவை அதிகரித்தபோதிலும், திமுக ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கியது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்டபோதிலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. நிா்வாகம் தெரியாமல் மற்றவா்கள் மீது பழி போடுவதைக் கைவிட்டு மின்வெட்டு பிரச்னையைத் தீா்க்க அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் செந்தில்பாலாஜி கூறியுள்ளாா்.