திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிந்து உயிரிழந்தோருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அதனை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.
இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது.
இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை விசிக தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. இழப்பீட்டுத் தொகையை ரூ. 10 லட்சமாக அறிவிக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.
Summary
Ammonia Leak: Rs. 10 Lakh Compensation Must Be Provided Thirumavalavan
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












