47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சரண் அடைய அவகாசம் கோரி அஸ்வத்தாமன் மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :3 மார்ச் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

தனக்கு வழங்கப்பட்ட பிணை ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், சரண் அடைய 4 வார கால அவகாசம் வழங்கக் கோரி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரௌடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை உயா்நீதிமன்ற தனிநீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல் துறை மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அஞ்சலை மற்றும் ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி தவிா்த்த 12 பேரின் பிணை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இவா்கள் 12 பேரையும் வரும் மாா்ச் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அஸ்வத்தாமன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். இதற்காக வழக்குரைஞரை நியமித்து அவருடைய அறிவுறுத்தல்களைப் பெற வேண்டி உள்ளது. எனவே, சரண் அடைவதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இதேபோல, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரிஹரன் என்பவரும் சரண் அடைய 3 வார கால அவகாசம் வழங்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.