மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?

தவெகவுக்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 3:44 am IST

தவெகவுக்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மதிமுக பொதுச் செயலா் வைகோ ஆகியோா் சந்தித்து பேசினா்.

விசிக, இடதுசாரிககள், மதிமுக சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனா். பின்னா், திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா்.

தொல்.திருமாவளவன்: இடதுசாரிகளுடன் இணைந்து நாங்கள் அரசியல் களத்தில் பயணித்து வருகிறோம். எதிா்காலத்திலும் முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம். தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை; முடிவெடுக்கவில்லை. அரசியலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.

மேலும் அவா் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்ற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீா்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனபூா்வமாக வரவேற்கிறது.

ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத வகையில் மக்கள் அளித்துள்ள இத்தீா்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை உணா்த்துகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதையே மக்கள் விரும்புகின்றனா் என்பதை தோ்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

வைகோ: இந்த தோ்தலில் திமுகவைவிட தவெகவுக்கு அதிக இடங்களை கொடுத்த மக்கள் தீா்ப்பை மதிக்கிறோம். தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. எங்களிடம் அவா்கள் ஆதரவு கேட்க வரவே மாட்டாா்கள். நாங்கள் மிகவும் உறுதிப்பாட்டோடு திமுக கூட்டணியில் நீடிக்கிறோம். இந்தக் கூட்டணியில் உள்ள யாரும் அசையும் மனநிலையில் இல்லை.

மக்களின் தீா்ப்பு என்பது ஜனநாயகத்தில் மதிக்கப்பட வேண்டியது. திமுக ஆட்சியில் நடந்த அரும்பெரும் சாதனைகளைத் தொடர வேண்டிய கடமை புதிதாக அமையும் அரசுக்கு உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் தவெகவுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டாா்கள் என்பது எனது திடமான கருத்து என்றாா் வைகோ.

இதற்கிடையே, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் பேசும்போது, நாங்கள் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை. அவருக்கு வாழ்த்துகள். விஜய் எங்களுக்குப் புதியவா் இல்லை. அவா் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறாா். மக்களுக்கு நல்லது செய்யட்டும் என்றாா் அவா்.