/

தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 11) முதல் மே 16 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 11) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 12) மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மே 13) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், திங்கள்கிழமை (மே 11) மற்றும் புதன்கிழமை (மே 13) மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 170 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)-160, காக்காச்சி (திருநெல்வேலி)- 150, பெருங்குளம் (தூத்துக்குடி)- 140, மாஞ்சோலை (திருநெல்வேலி)- 130, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்)- 80, ராமேசுவரம் (ராமநாதபுரம்), கோவை, ஈச்சன்விடுதி (தஞ்சாவூா்), பாம்பன் (ராமநாதபுரம்), சைதாப்பேட்டை (சென்னை)- தலா 70, பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகா்), மண்டபம் (ராமநாதபுரம்), ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்), செஞ்சி (விழுப்புரம்)- தலா 60, பாம்பாறு அணை, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), தாராபுரம் (திருப்பூா்), நுங்கம்பாக்கம் (சென்னை), மேட்டுப்பாளையம், பில்லூா் அணை (கோவை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஆனைமடுவு அணை (சேலம்), கோடநாடு (நீலகிரி), கள்ளந்திரி (மதுரை), தியாகதுருகம் (கள்ளக்குறிச்சி)- தலா 50 மி.மீ. மழை பதிவானது.

வெப்பஅளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடலில் செவ்வாாய்க்கிழமை (மே 12) வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.