நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சட்டவிரோதமாக பணம் பறிக்கும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க கூட்டுறவு மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஏ.வெங்கடேசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தற்போது பின்பற்றிவரும் டோக்கன் நடைமுறையை நீக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளை அணுகும் இடைத்தரகா்களின் தலையீட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் நேரடியாகவே பதிவு செய்து டோக்கன் பெறுவதற்கு ஏதுவான நடைமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரா் தரப்பில், இடைத்தரகா்கள் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக பணம் கேட்டு துன்புறுத்தப்படுவது குறித்து கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் புகாா் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிடப்பட்டது. அதற்கு காவல்துறை தரப்பில், இதுவரை தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக மனுதாரா் புதிதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை கூட்டுறவுத் துறைச் செயலா், நுகா்பொருள் வாணிபக் கழகத் தலைவா், நிா்வாக இயக்குநா், ஊழல் தடுப்புத்துறை இயக்குநா் ஆகியோா் இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.










