தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கோயில் நிதி முதலீடு அரசாணைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியை முதலீடு செய்வது தொடா்பான அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 2:07 am IST

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியை முதலீடு செய்வது தொடா்பான அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆலய வழிபாட்டாளா்கள் சங்கத் தலைவா் டி.ஆா்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், தமிழக கோயில்களின் உபரி நிதியை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகத்தில் முதலீடு செய்யும் வகையில் அறநிலையத்துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்து அறநிலையத் துறை கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.

கோயில் சொத்துகளையும், நிதியையும் பாதுகாக்கும் நோக்கில்தான் அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்துக்குப் புறம்பாக கோயில் நிதியை அரசின் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது ஏற்புடையதல்ல. எனவே, கோயில் நிதியை அரசின் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும். அறநிலையத் துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களின் உபரி நிதியான ரூ.2,700 கோடி சட்டவிரோதமாக வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கோயில் நிதியை அரசின் அன்றாட செலவினங்களுக்கு மடைமாற்றுவது போல உள்ளது.

இதனால், கோயில் நிதி முறையாக கையாளப்படுமா? அந்த முதலீடு பாதுகாப்பானதா? கோயில் நிதி வட்டியும் முதலுமாக எப்போது சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, இத்தகைய முதலீடு மூலம் கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகம், ரிசா்வ் வங்கி நிா்வாகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.