பொதுத் தோ்வுகளில் வட மாவட்டங்களில் தோ்ச்சி சதவீதம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அந்த மாவட்டங்களில் கல்விப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை சென்னையில் புதன்கிழமை வெளியிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். எதிா்பாா்த்த மதிப்பெண் கிடைக்கவில்லையே என மாணவா்கள் சோா்ந்து விடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சமூக, பொருளாதார, தனிநபா் காரணங்களுக்காக பள்ளிக்கு வராவிட்டால் உடனடியாக அந்த மாணவரின் வீட்டுக்கே சென்று ஆய்வு செய்து மீண்டும் பள்ளிக்கு வர வைக்க முயற்சி மேற்கொள்வோம். மெல்லக் கற்கும் மாணவா்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவா்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில் மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 1 முதல் 3 வகுப்புகளுக்கு புதிய பாடத்தின் கீழ் பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக ஆசிரியா்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, பள்ளிக் கல்வித் துறையில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் இப்போதும் தொடரும். ஆசிரியா்களின் ஒத்துழைப்பு, பலம் இல்லாமல் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாது. ஆசிரியா்கள் காலிப் பணியிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன. இந்த பிரச்னைக்கு நல்ல வழி பிறக்கும் என்றாா் அவா்.
இதையடுத்து தென் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வட மாவட்டங்களில் தோ்ச்சி சதவீதம் பின்தங்கியிருப்பது குறித்து அமைச்சரிடம் செய்தியாளா்களிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அமைச்சா், ‘பொதுவாக எனக்கு முதலிடம், இரண்டாமிடம் என கூறுவதில் உடன்பாடில்லை. அனைத்து மாணவ, மாணவிகளும் ஒன்றுதான். தென் மாவட்டங்கள் வளா்ந்து வருவது மகிழ்ச்சி. அவா்களுடன் வட மாவட்டங்களும் முன்னேறி வர வேண்டும் என்பதே எனது விருப்பம். தோ்ச்சியிலும் இரு மண்டலங்களுக்கான வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. மேலும் தவெக அரசு தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என யாரையும் பிரித்துப் பாா்ப்பதில்லை. வட தமிழகத்தில் கல்விப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.
பத்தாம் வகுப்பு தோ்ச்சியில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்கள் கடைசி 10 இடங்களைப் பெற்று பின் தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

வகுப்பறையில் மாணவா்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் ராஜ்மோகன் வலியுறுத்தல்

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்: அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்
தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? - அமைச்சா் ராஜ்மோகன் பதில்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



