தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைத்த முதல் இயக்கம் விசிகதான் என்று கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது, "எங்கள் 2 எம்எல்ஏ-க்களான வன்னி அரசு மற்றும் ஜோதிமணி ஆகியோரின் பெயர்களைப் பரிந்துரைக்க முடிவு செய்தோம். இன்று அமைச்சரவையின் ஒரு பகுதியாக நாங்கள் இருப்போம் என்ற அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறோம்.
எங்கள் கட்சிக்குள் பெரும்பான்மை கருத்து என்னவென்றால், அமைச்சரவையில் விசிக இருக்க வேண்டும் என்பதுதான். கடந்த 8 ஆம் தேதியில் இணையவழிக் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிலரைத் தவிர பெரும்பாலானோர், கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவ வேண்டும் என்றே கூறினர்.
இறுதியாக, தலைவர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
தவெகவுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முடிவு செய்தோம். அதன் அடிப்படையில்தான் ஆதரவுக் கடிதத்தை நாங்கள் வழங்கினோம்.
தமிழ்நாட்டுக்குள் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைத்த முதல் இயக்கம் விசிகதான்.
1999-ல் மூப்பனாருடன் நாங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டபோது, நிர்வாகத்தில் பங்கேற்பதற்கும், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் செய்வதற்கும் நாங்கள் முன்மொழிந்தோம். கூட்டணி ஆட்சி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
எனவே, தவெக விடுத்த அழைப்பையும், கட்சியின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையும் கருத்தில்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என கருத்தைத்தான் கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் முன்வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
Summary
The first movement to advocate the idea of bringing a coalition form of governance to Tamil Nadu was the VCK, says Thol. Thirumavalavan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






