தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அதில், “உண்மையில், நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. கோப்புகள், ஒப்புதல்கள், தாமதங்கள், காத்திருப்பு போன்றவற்றை சரிசெய்ய முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார். நமது அரசு அதிவேக செயல்பாட்டை முன்னெடுக்க கட்டமைக்கப்பட்டு வருகின்றது என நான் உறுதியளிக்கிறேன்.
21 நாள்களில் நிறுவனங்களுக்கு அனுமதி, ஒற்றைச் சாளர ஒப்புதல், அமைச்சர் மற்றும் முதல்வரிடம் நேரடியாகப் பிரச்னைகளைக் கொண்டு செல்லும் முறை என எங்கள் வாக்குறுதிகளை அளிக்கிறோம்.
மாநிலம் முழுவதும் விரைவுத் தொழில் மண்டலம் அமைக்கப்படும். உலகம் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அதனைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம்.
செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நகரம், ட்ரோன் வழித்தடம், மின்சார வாகன உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் என வளர்ச்சி என்பது ஒன்று, இரண்டு மாவட்டங்களுக்காக மட்டுமன்றி மாநிலம் முழுவதும் பரவிய வளர்ச்சியாக இருக்கும்.
தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே முதல்வர் விஜய்யின் நோக்கம். எனவே, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்” எனப் பேசியுள்ளார்.
Summary
Approval to Start New Businesses in Tamil Nadu Within 21 Days: Minister Keerthana Announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










