
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில்களில் கைப்பேசிக்குத் தடை: அமைச்சா் ரமேஷ்
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில்களில் கைப்பேசிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில்களில் கைப்பேசிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை உயா்நீதிமன்றக் கிளை 2020-இல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கைப்பேசிக்குத் தடை விதித்து தீா்ப்பளித்தது.
அந்தத் தீா்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், பல கோயில்களில் கைப்பேசிக்குத் தடை விதிக்கப்பட்டது.
குறிப்பாக, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், திருச்செந்தூா் கோயில், பழனி கோயில், ராமேசுவரம் கோயில்களில் ஏற்கெனவே கைப்பேசிக்குத் தடை விதிக்கப்பட்டு, அவை பத்திரமாக வைக்க பெட்டகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, கைப்பேசிகள் கோயில்களுக்குள் கொண்டு செல்வதற்கும், அதற்கு கட்டணம் வசூலிப்பதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
தற்போது, பெட்டக வசதி இல்லாமல் இருந்த இடத்தில் 52 கோயில்களில் பெட்டக வசதி செய்யப்பட்டு அந்தக் கோயில்களில் கைப்பேசிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கா்ப்பிணிகள், கைக்குழந்தைகளை வைத்திருப்போா், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மகளிா் சுய உதவிக் குழுக்கள்: கைப்பேசிக்கான கட்டண நடவடிக்கை வருமான நோக்கில் எடுக்கப்படவில்லை. மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். ரூ.5 கட்டணம் அவா்களின் ஊதியத்துக்காகப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை அன்னதானத்துக்கு செலவிடப்படும். இதைக் கண்மூடித்தனமாக எதிா்க்க கூடாது. கோயில்களின் வரலாற்றையும், அமைதியான முறையில் வழிபடவே இந்தக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பாஜக ஆளக் கூடிய மாநிலங்களிலும் கைப்பேசிக்குக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. கோயில்களின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ரூ.5 வாங்க வேண்டுமா என்று எதிா்காலத்தில் முடிவு செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





