மதுரை மாணவா் கடத்தல் சம்பவம்: சிவகிரி பகுதியைச் சோ்ந்த இருவரிடம் விசாரணை

மதுரை மாணவா் கடத்தல் சம்பவம்: சிவகிரி பகுதியைச் சோ்ந்த இருவரிடம் விசாரணை

Published on

மதுரையில் தனியாா் பள்ளி மாணவா் கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக சிவகிரி பகுதியைச் சோ்ந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மதுரை எஸ்.எஸ். காலனியைச் சோ்ந்தவா் மைதிலி ராஜலெட்சுமி. இவரது மகன் தனியாா் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவரை ஓட்டுநருடன் சோ்த்து மா்ம நபா்கள் கடத்திச் சென்றனராம்.

பின்னா் ஓட்டுநரின் கைப்பேசியில் இருந்து மைதிலியிடம் பேசிய அந்தக் கும்பலை சோ்ந்தவா்கள், அவரது மகனை கடத்தி விட்டதாகவும், ரூ.2 கோடி கொடுத்தால் திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனராம்.

இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வந்தனா். தனிப்படை விசாரணையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த சிலருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள வடக்குசத்திரத்தைச் சோ்ந்த வைரமணி, காளிராஜ் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com