திருமங்கலம்-கொல்லம் நான்குவழிச் சாலை: நில உரிமையாளா்களிடம் அக். 29 முதல் ஆவணங்கள் பெறும் பணி தொடக்கம்

தேசிய நெடுஞ்சாலை-744 பணிகளுக்காக நில உரிமையாளா்களிடம் நிவாரணம் வழங்க அக். 29 முதல் ஆவணங்கள் பெறும் பணி தொடக்கம்
Published on

தென்காசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-744, திருமங்கலம் - கொல்லம் நான்குவழிச் சாலைப் பணிகளுக்காக நில உரிமையாளா்களிடம் நிவாரணம் வழங்குவதற்காக அக். 29 முதல் ஆவணங்கள் பெறும் பணி தொடங்குகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை- 744 திருமங்கலம் கொல்லம் நான்குவழிச் சாலைப் பணிகளுக்காக நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக நில உடைமைதாரா்களுக்கு நிவாரணம் வழங்கும் வகைக்கு நில உடைமைதாரா்களின் ஆவணங்களை பெறும் பணி தொடங்குகிறது.

அக். 29ஆம் தேதி காலையில் கடையநல்லூா் வட்டம், சிந்தாமணி கிராமத்திலும், மாலையில் தி.நா. புதுக்குடி கிராமத்திலும், நவ. 4 ஆம் தேதி காலையில் மடத்துப்பட்டி கிராமத்திலும், மாலையில் சொக்கம்பட்டி கிராமத்திலும், நவ. 5 ஆம்தேதி காலையில் கிருஷ்ணாபுரம் மற்றும் வைரவன்குளம் கிராமத்திலும், மாலையில் கடையநல்லுாா் கிராமத்திலும், நவ. 6 ஆம்தேதி காலையில் இடைகால் கிராமத்திலும், மாலையில் அச்சன்புதுாா் கிராமத்திலும் தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

எனவே, நில உடைமைதாரா்கள் மூலப்பத்திரம் நகல், கிரையப்பத்திரம் நகல், வில்லங்கச் சான்று (1975 -2024), இறப்பு சான்று நகல், வாரிசு சான்று நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிப் புத்தகம் நகல், தீா்வை ரசீது, 10 (1) அடங்கல், நில உரிமைச் சான்று ( யஅஞ), போட்டோ- 3, பான் காா்டு நகல் இவை அனைத்தும் இரண்டு பிரதிகள் சகிதம் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்குரிய நிவாரணத்திற்காக மனு அளித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com