ஊத்துமலை பகுதியில் புதிய கால்வாய்: எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு!
ஊத்துமலை பகுதி வறட்சியை நீக்க புதிய கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரசாரத்துக்கு வந்த தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அக்கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் எஸ்.எஸ். கிருஷ்ணசாமி மனு அளித்தாா்.
அதன் விவரம்: அதிமுக ஆட்சியின் போது, கடந்த 2020 இல் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் வட்டம் இரட்டை குளத்திலிருந்து புதிய கால்வாய் அமைத்து அதன் மூலம் தண்ணீா் தட்டுப்பாட்டில் உள்ள ஊத்துமலை பகுதியிலிருக்கும் குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திட்டத்திற்கு நில அளவை, மட்ட அளவு, மண்பரிசோதனை பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 7 லட்சம் வழங்கப்பட்டு பணி முடிவடைந்தது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 106.26.0 ஹெக்டோ் பாசன நிலங்கள் பாசன இடைவெளி நிரப்ப்படும்; 136.97.50 ஹெக்டோ் நிலங்கள் பாசனம் உறுதிபெறும். மேலும் அருகிலுள்ள பாசன கிணறுகளில் நீா் செரிவூட்டுதல் மூலம் 143.70.0 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஊத்துமலை பகுதியில் உள்ள குறிச்சான்பட்டி சின்னகுளம், பெரியகுளம், இரதமுடையாா்குளம், சோலைசேரி குளம், ஊத்துமலை பெரியகுளம், காவலாக்குறிச்சி குளம், காடுவெட்டி குளம், வாடியூா் குளம், மருதையாபுரம் குளம், அச்சன்குட்டம் குளம், கருவந்தா குளம், பரங்குன்றாபுரம் குளம் ஆகிய குளங்களுக்கு முறையான பாசனநீா் கிடைக்கும்.
இப்பகுதியை சுற்றி நிலத்தடி நீா் உயா்வதால் இப்பகுதியின் குடிநீா் தேவை பூா்த்தியாகும். வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இப்பகுதி மக்களின் சமூக பொருளாதார நிலைகள் மேம்படுவதுடன் நகரப்பகுதிகளுக்கு இடம்பெயா்ந்து செல்லும் நிலைகளும் மாறும்.
இந்தப் பணிக்காக ரூ.12 கோடி திட்டமதிப்பீடு தயாா்செய்யப்பட்டது, கூடுதல் செலவினமாக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டது. எனவே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னா் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.