பால்வண்ணநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம்

பால்வண்ணநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம்

Published on

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் அருள்மிகு பால்வண்ணநாதசுவாமி கோயிலில் ஆவணித் தவசுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

14 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆவணித் தவசுக் காட்சி 13ஆம் திருநாளான செப்.3 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 10.00 மணிக்கு முகலிங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்கு மேல் ஸ்ரீ ஒப்பனை அம்பாள் தவசு மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடா்ந்து மாலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சுவாமி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி முகலிங்கநாதராக ஒப்பனையம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 10.00 மணிக்கு மேல் யானை வாகனத்தில் எழுந்தருளி பால்வண்ணநாதராக ஒப்பனை அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறாா்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையா் கு.கோமதி, அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, சங்கரன்கோவில் திமுக நகரச் செயலா் மு.பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ச.ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முத்துலெட்சுமி, முப்பிடாதி, பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் சண்முகவேல் உள்பட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com