புளியங்குடியில் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம்
தென்காசி மாவட்ட வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் புளியங்குடி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழாண்டு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 4.0 தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமை தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரெஜினி தொடங்கி வைத்து பள்ளிகளை இணையதளத்தில் பதிவுசெய்வது, பள்ளி மாணவா்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், ஆசிரியா்கள், மாணவா்களுக்கான இணையதள கற்றலை நிறைவு செய்தல், புத்தாக்க சிந்தனைகளை உருவாக்குதல் ஆகியவை குறித்துப் பேசினாா். முகாமில் 120 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதில், அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி தாளாளா் முருகன், செயலா் ஜெயஒலிவு, கல்வித்துறை துணை ஆய்வாளா் சுப்புலட்சுமி, அன்னை மீனாட்சி கல்லூரி முதல்வா் அந்தோணிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
ஏற்பாடுகளை தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளா் பலவேசம், தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன் ஆகியோா் செய்திருந்தனா்.