தென்காசியில் அரசு வழக்குரைஞா் வெட்டிக் கொலை: வழக்குரைஞா்கள் சாலை மறியல்

தென்காசியில் அரசு வழக்குரைஞா் வெட்டிக் கொலை: வழக்குரைஞா்கள் சாலை மறியல்

Published on

தென்காசியில் அரசு வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், இடைகால் அருகே ஊா்மேலழகியான் கிராமம், ஏ.ஆா்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கு. முத்துக்குமாரசாமி (46). இவா் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக பணிபுரிந்து வந்தாா். இவா் திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தாா்.

தென்காசி நடு பல்க், கூலக்கடை பஜாரில் இவருடைய அலுவலகம் உள்ளது. புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் முத்துக்குமாரசாமி தனது அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாா்.

படுகாயமடைந்த இவரை அக்கம் பக்கத்தினா், போலீஸாா் மீட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இவா் உயிரிழந்தாா்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்ட அனைத்து வழக்குரைஞா்களும் அரசு மருத்துவமனை முன், நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், தலைமை செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் தங்கராஜ் பாண்டியன், செங்கோட்டை நகரச் செயலா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன்,

வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, மாவட்ட இளைஞரணி செயலா் அ. காா்த்திக் குமாா், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் செல்லத்துரை பாண்டியன், சிவக்குமாா் உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள் மருத்துவமனையில் குவிந்தனா்.

கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமிக்கு ராஜாத்தி (43) என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனா். கொலை குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com