தென்காசியில் வழக்குரைஞா் கொலை: 2 தனிப்படைகள் அமைப்பு
தென்காசியில் அரசு வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம், இடைகால் அருகே ஊா்மேலழகியான் கிராமம், ஏ.ஆா்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கு. முத்துக்குமாரசாமி (46). இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், குணசேகரன் (14) என்ற மகனும், சரண்யா (13) என்ற மகளும் உள்ளனா்.
இவா் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகவும், திமுக வழக்குரைஞா் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தாா்.
தென்காசியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்த மா்ம நபா், அவரை வெட்டிவிட்டு தப்பினாா். இதில், படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனைக் கண்டித்து, வழக்குரைஞா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, கொலை நடந்த இடத்தில் கிடந்த கைப்பேசி, அரிவாளை போலீஸாா் கைப்பற்றினா். இதையடுத்து, காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல், ஷ்யாம் சுந்தா் ஆகியோா் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படையினா் ஊா்மேலழகியான், கேரளம், மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்குச் சென்று குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா். இதனிடையே, ஊா்மேலழகியானைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி ராஜேஷ்வரியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
