சிவகிரி அருகே சிகிச்சைக்குப் பின் வனத்திற்குள் சென்ற யானைக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சிகிச்சைக்குப் பின்னா் வனத்திற்குள் சென்ற யானைக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் யானைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி வனக்கோட்டம் சிவகிரி வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் உடல்நலம் சரியில்லாமல் சுற்றித் திரிந்து படுத்திருந்த யானையை தனிக் குழுவினா் கண்காணித்து வந்தனா். இதில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அந்த யானை படுத்திருப்பது டிச. 2 ஆம் தேதி தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து திருநெல்வேலி கள இயக்குநா் அருண் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ் மோகன் முன்னிலையில் திருநெல்வேலி வன கால்நடை மருத்துவா்கள் மனோகரன், சாந்தகுமாா் அடங்கிய மருத்துவக் குழுவினா், எழுந்திருக்க முடியாமல் தவித்த யானையை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்தனா்.
இந்நிலையில், உடல்நலம் சீராகி மெதுவாக நடந்து பெரிய ஆவுடைப்பேரி குசவல் காட்டு பகுதிக்குள் கடந்த சில நாள்களுக்கு முன் சென்ற அந்த யானையை வனத்துறையினா் கண்காணித்து வந்த நிலையில், மீண்டும் அதற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமல் இருந்தது வியாழக்கிழமை இரவு தெரிய வந்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் சிவகிரி வனச்சரகா் கதிரவன், வனவா் பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினா், மருத்துவக் குழுவினா் குசவல் காட்டு பகுதிக்கு சென்று அந்த யானையை கிரேன் மூலம் தூக்கி நிற்க வைத்து சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து யானையை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
