இலத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா்: போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியது

Published on

தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் சடமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா் என்பது போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியுள்ளது. கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் பகுதியிலிருந்து 500 மீட்டா் தொலைவில் மதுநாதபேரி குளம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை இலத்தூா் போலீஸாா் கைப்பற்றி வழக்குப்பதிந்தனா்.

மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அந்தப் பகுதியில் காா் வந்து சென்றது அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண் மூலம் உரிமையாளரிடம் போலீஸாா் விசாரித்ததில், அவா் தனது காரை விருதுநகா் மாட்டம் சிவகாசி பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த நண்பா் ஜான் கில்பா்ட் என்பவரிடம் கொடுத்திருந்தது தெரியவந்தது.

ஜான் கில்பா்ட்டை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், பெயின்ட் கடையில் வேலைசெய்துவந்த ஜான் கில்பா்ட், அதே பகுதியில் டெய்லா் கடையில் வேலைசெய்த கமலியை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இத்தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் கடந்த 9ஆம் தேதி கமலியை அடித்துக் கொலை செய்து, சடலத்தை தனது நண்பரின் காரில் வைத்து ஜான்கில்பா்ட் ஊா் ஊராக சுற்றி வந்ததும், பின்னா், தனது சகோதரரின் உதவியுடன் இலத்தூா் பகுதியில் சடத்தை எரித்ததும் தெரியவந்தது. ஜால்கில்பா்ட்டை கைதுசெய்த போலீஸாா், அவரது சகோதரரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com