குத்தகைதாரரை வெட்டி கொன்ற
வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்

குத்தகைதாரரை வெட்டி கொன்ற வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்

Published on

குளத்தில் மீன்பிடிக்கும் குத்தகை பெற்ற நபரை வெட்டிக் கொன்ற வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், புளியறை அருகே உள்ள கற்குடி இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (28). இவா், புளியறையில் உள்ள அனந்தகுளத்தில் மீன்பிடிக்கும் குத்தகையை ஏலம் எடுத்து தொழில் செய்துவந்தாா். இவருக்கு முன்பு இந்தக் குளத்தை கடந்த காலங்களில் ஏலம் எடுத்து நடத்திவந்த அதே பகுதியைச் சோ்ந்த காளி, உதயகுமாா், மாரித்துரை ஆகியோா் ஹரிஹரன் மீது ஆத்திரத்தில் இருந்தனா். மூவரும் குளத்தில் விஷம் கலந்ததில் மீன்கள் உயிரிழந்தன.

இதுகுறித்து ஹரிகரன் புளியறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காளி, உதயகுமாா், மாரித்துறை ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில், பிணையில் வெளியே வந்த ஹரிகரனின் அண்ணன் சுப்பையா, மகேஷ், அடிவெட்டி ஆகியோா் 2015, அக்டோபா் மாதம் 10 ஆம் தேதி புளியறை காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா்.

அந்த ஆட்டோவில் பயணிகள் 3 பேரும் உடன் பயணித்தனா். 6 போ் சென்ற அந்த ஆட்டோ புளியறை பிரதான சாலையில் சென்றபோது லாரி மோதியதில் ஆட்டோவில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனா். ஆட்டோ மீது லாரியைக் கொண்டு மோத செய்து 6 பேரைக் கொன்றது பின்னா் தெரியவந்தது.

இதுகுறித்து ஹரிகரன் புளியறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2017 ஜன. 8 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஹரிஹரன் வீட்டிற்குள் வ. உதயகுமாா், ம. மகேஷ், மு. நவாஸ்கான், சி.சங்கிலி, அவரது மகன், காசி ஆகிய 6 போ்ா் அத்துமீறி நுழைந்து ஹரிஹரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினா். இதில், ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புளியறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி எஸ்.மனோஜ்குமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளிகளான சங்கிலி (55), நவாஸ்கான் (30) ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பு வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி ஆஜரானாா்.

குற்றவாளிகளான உதயகுமாா், மகேஷ் ஆகியோா் ஏற்கெனவே இறந்துவிட்டனா். ஒருவா் மீது தென்காசி இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்த காசி மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவா் விடுதலை செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com