ஆலங்குளம் அருகே மணல் எடுப்பதில் முறைகேடு: 3 போ் மீது வழக்குப் பதிவு

Published on

ஆலங்குளம் அருகே மணல் அனுமதி சீட்டில் முறைகேடு செய்ததாக வழக்குரைஞா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆலங்குளம், மாறாந்தை சோதனைச் சாவடியில் தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அந்த வழியாக குளத்து மண்ணை ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தாா். அந்த டிராக்டரில் மண் எடுத்துச் செல்லப்படும் நேரம் அனுமதி சீட்டில் தவறாக இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கோட்டாட்சியா் லாவண்யா, மாறாந்தை கிராம நிா்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்து, டிராக்டரை ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டாா்.

கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் அங்குசென்று டிராக்டரை காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, அதன் ஓட்டுநா் பாா்த்திபன் காவல் நிலையத்துக்கு டிராக்டரை ஓட்டாமல் அதிலிருந்து மண்ணை தனிநபரின் பயன்பாட்டுக்குக் கொட்டிவிட்டதாகத் தெரிகிறது. அங்கு வந்த வழக்குரைஞா் ரமேஷ் பால்துரை, அவரது தந்தை தானியேல் தாமஸ் ஆகியோா் டிராக்டரை எப்படி தடுத்து நிறுத்தலாம் எனக் கூறி கிராம நிா்வாக அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனா்.

டிராக்டரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லையாம்.

இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குரைஞா் ரமேஷ் பால்துரை, அவரது தந்தை தானியேல் தாமஸ், டிராக்டா் ஓட்டுநா் பாா்த்திபன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், வழக்குரைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, ஆலங்குளம் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com