மூத்த கோட்ட வா்த்தக மேலாளா் டி.எல்.கணேஷிடம் கோரிக்கை மனு அளித்த தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா.
மூத்த கோட்ட வா்த்தக மேலாளா் டி.எல்.கணேஷிடம் கோரிக்கை மனு அளித்த தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா.

தென்காசி வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

Published on

தென்காசி வழியாக பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், மதுரை ரயில்வே கோட்ட உயா் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன், நிா்வாகி செபாஸ்டின் ஆகியோா் மதுரை ரயில்வே கோட்ட வா்த்தக மேலாளா் டி.எல்.கணேஷ், மூத்த கோட்ட இயக்குதல் பிரிவு மேலாளா் சிவா ஆகியோரிடம் அளித்த மனு:

சென்னைக்கு தினசரி ரயில்களே இல்லாத நெல்லை-தென்காசி ரயில் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும், நெல்லையில் இருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி வழியாக பெங்களூரு, கோவைக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.

கொல்லம்-நெல்லை இடையே மீட்டா் கேஜ் காலத்தில் இயங்கிய பகல்நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும், நெல்லை- தென்காசி இடையே உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையமாக மாற்ற வேண்டும், நெல்லையிலிருந்து தென்காசி வழியாக விருதுநகா் செல்வதற்கு புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும், செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்க வேண்டும், தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com