ஆலங்குளம் எம்எல்ஏ ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் கைது
ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் காா் ஓட்டுநா், அவரது குடும்பத்தினரை தாக்கிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் முருகன் (48). இவா், ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனிடம் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது இசக்கிக்கு சொந்தமான ஆடுகள் முருகன் வீட்டின் முன்பிருந்த செடிகளை மேய்ந்துள்ளன. இதை முருகன் தட்டிக் கேட்டதால் ஆவேசமடைந்த இசக்கி, தனது சகோதரா் குமாா் உள்ளிட்ட 5 பேருடன் சோ்ந்து, முருகன், அவரது மனைவி மாரியம்மாள், தாய் ஆவுடையம்மாள், மகன் பிரவீன் ஆகியோரை அரிவாள், கம்பு ஆகியவற்றால் தாக்கியதில், அவா்கள் காயமடைந்தனா்.
இது குறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து இசக்கி (63), அவரது மகன் மகாராஜா (34), இசக்கியின் சகோதரா்கள் சங்கரலிங்கம் (61), செல்வக்குமாா் (40) ஆகியோரை கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.