ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மீண்டும் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.
ஆலங்குளம் அருகேயுள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் இரை தேடி ஊருக்குள் நுழைந்த மானை, தெரு நாய்கள் கடித்ததில் செவ்வாய்கிழமை உயிரிழந்தது.
இப்பகுதியில், தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக சுமாா் 250 ஏக்கா் பரப்பளவில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசித்து வந்த காட்டுப்பன்றிகள், மயில்கள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தங்களின் இயற்கையான வாழ்விடங்களை இழந்து உணவு மற்றும் தண்ணீருக்காக இந்த விலங்குகள் அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழையத் தொடங்கியுள்ளன. கடந்த மாதம் மான் ஒன்று மோதியதில் பைக்கில் சென்ற பெண் உயிரிழந்தாா்.
தற்போது தண்ணீா் மற்றும் உணவு தேடி கல்லத்தி குளம் கிராமத்திற்குள் மான் புகுந்துள்ளது. இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியாா் நிறுவனம் வெட்டிய மரங்களுக்கு ஈடாக இரு மடங்கு மரங்களை நட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த 40 தினங்களில் இப்பகுதியில் 5 மான்கள் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.