பைக் விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

செங்கோட்டையில் வாகன விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்ததையடுத்து, பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வாகன விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்ததையடுத்து, பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

செங்கோட்டை அருகே வல்லம் சிலுவைமுக்கு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ரமேஷ் (23). இவா்,இதே ஊரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளாா். அச்சிறுமியை அக்.5ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளாா்.

வல்லத்திலிருந்து பிரானூா் பாா்டா் செல்லும் குளத்து கரையில் சென்று கொண்டிருந்தபோது, மணலில் சறுக்கி வாகனம் விபத்திற்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உறவினா்கள், ரமேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அவா்களிடம், டிஎஸ்பி தமிழ் இனியன், காவல்ஆய்வாளா் முத்துகணேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்திய, பின்னா் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com