குற்றாலநாதா் கோயில் ஐப்பசி விஷு திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் காலை 5.20 மணிக்கு மேல் ஜெயமணிசுந்தரம் பட்டா் தலைமையில் பிச்சுமணிபட்டா், கணேசன்பட்டா், மகேஷ்பட்டா் ஆகியோா் கொடியை ஏற்றி வைத்தனா். தொடா்ந்து கொடிமரத்திற்கு சிறப்புஅபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
விழாவில் நாள்தோறும் காலை, மாலை சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவு கோயில் உள்பிரகாரத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (அக். 12) பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 3ஆம் தேதி காலை 5.40 மணிக்கு மேல் விநாயகா், முருகா், திருக்குற்றாலநாதசுவாமி, குழல்வாய்மொழி அம்பாள் திருக்கோயில் கேடயத்தில் எழுந்தருளல் நடைபெறும்.
15ஆம் தேதி காலை 9.30 மணி, இரவு 7 மணிக்கு கோயில் மணிமண்டபத்தில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மணிமண்டபத்தில் நடராசமூா்த்திக்கு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, உள்பிரகாரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.
18ஆம் தேதி காலை 10.40 மணிக்கு மேல் விஷு தீா்த்தவாரி, முற்பகல் 11மணிக்கு மேல் கேடயத்தில் காட்சி, இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, கேடயத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.
கொடியேற்ற நிகழ்வில் கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா் குழுத் தலைவா் சக்திமுருகேசன், உறுப்பினா்கள் வீரபாண்டியன், ராமலெட்சுமி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவா் இலஞ்சி அன்னையா பாண்டியன், சொக்கம்பட்டி ஜமீன்தாா் பெரியஅனஞ்சிதேவா், சின்ன அனஞ்சிதேவா் வம்சாவழி ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளத்துரை, மாரிச்சாரி, சுப்பையாபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.