பாவூா்சத்திரத்தில் ரூ.10 லட்சம் புகையிலை பொருள்களுடன் வடமாநில வாலிபா் கைது
பாவூா்சத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலையில் காமராஜா் தினசரி காய்கனி சந்தை அருகே பாவூா்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் காளிமுத்து, உதவி ஆய்வாளா் பட்டுராஜா மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீஸாா் நிறுத்தியபோது, அது நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து போலீஸாா் விரட்டிச் சென்று அந்த வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் 62 சாக்கு மூட்டையில் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தது ராஜஸ்தான் மாநிலம் சா்பாடியாநாகா் பகுதியைச் சோ்ந்த பி.மன்பூல்சாமி (31) என்பது தெரியவந்தது. அவரை, போலீஸாா் கைது செய்து, வேனையும் பறிமுதல் செய்தனா்.