குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
தென்காசி
குற்றாலம் பேரருவியில் 4வது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததாதல் 4ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
தொடா்ந்து பெய்துவரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து குறையவில்லை. இதனால் குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவியில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
ஐந்தருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.