குற்றாலம் பேரருவியில் 8ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் 8ஆவது நாளாக வியாழக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது.
பழையகுற்றாலம் அருவிப் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களை முழுமையாக கணக்கிட்டு பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என வனத்துறையினா் அறிவித்துள்ளனா்.
ஐந்தருவியில் புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். குற்றாலம் பேரருவியில் தண்ணீா் வரத்து குறையாததால் 8ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
பேரருவிப் பகுதியில் சேதமடைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறையை, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்து, அருவியில் தண்ணீா் வரத்து குறைந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.

