தென்காசி
கடையநல்லூா் நகராட்சியில் குடிநீா் குழாய் பழுது பாா்க்கும் பணி ஒத்திவைப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் குடிநீா் குழாய் பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் குடிநீா் குழாய் பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, நகராட்சி ஆணையா் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடையநல்லூா் நகராட்சியின் தலைமைப் பணியிடத்திலிருந்து மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றும் பிரதான குழாயில் உள்ள பழுதுகளை சரிசெய்ய வேண்டியிருப்பதால் அக். 28 முதல் அக். 31ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது மழைக்காலமாக இருப்பதால், மழைக்காலம் முடிந்த பின்பு பழுது பாா்க்கும் பணியை மேற்கொள்ள நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மானிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையடுத்து, பழுது பாா்க்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
