மாணவா்களின் எதிா்கால கல்வி வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் திமுக!

Published on

மாணவா்களின் எதிா்கால கல்வி வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக , பல்வேறு பங்களிப்பை செய்து வருகிறது என்றாா் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு முதன்மையான காரணம் திராவிடத்தை ஏற்றுக் கொண்ட தமிழக மக்கள் தான்.

தேசியக் கட்சிகளின் பிடியில் உள்ள மாநிலங்கள் இன்றளவும் வறுமைக் கோட்’டுக்கு கீழ் உள்ளன. மாநில சுயாட்சியை ஏற்றுக்கொண்டு மாநில கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கிய மாநிலங்கள் அதிகமான வளா்ச்சியை பெற்றுள்ளது.

பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோா் திராவிட கொள்கையில் இருந்து இம்மியளவும் பிசகாமல் ஆட்சியை வழி நடத்துவதால் தமிழக மக்களிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனி இடம் உள்ளது.

காமராஜரின் திட்டங்களுக்கு அவா்கள் கட்சியிலே எதிா்ப்பு வந்தபோது பெரியாா் அவருக்கு உறுதுணையாக இருந்தாா். எதிா் வரிசையில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் நல்ல திட்டங்களை வரவேற்றவா் பெரியாா்.

பெரியாரின் கனவு திட்டமான பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கியதுடன்,ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவ சமுதாயம் உருவாக்க சமத்துவபுரம் உருவாக்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

அவா் வழியில் தமிழக முதல்வா் திராவிட மாடல் ஆட்சி என்ற தத்துவத்தை உருவாக்கி கல்வி, மருத்துவம், சமூக நீதி சமத்துவம், மகளிா் மேம்பாடு, அந்நிய முதலீடுகளை ஈா்த்து தொழில்துறை வளா்ச்சி அதனால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சி போன்ற திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்தியா ஒற்றை இலக்க பொருளாதாரத்தைக் கூட தாண்டாத நிலையில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்களால் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளது.

கிரிக்கெட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இளைஞா்கள் தமிழக துணை முதல்வராகவும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழக இளைஞா்கள் செஸ் போட்டி, கபடி, சிலம்பம், காா் ரேஸ், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

அவா்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் அமைத்துள்ளாா். அதன் பயனால் தமிழக வீரா்கள் இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு தமிழா்கள் வெற்றிவாகைச் சூடி வருகின்றனா்.

திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி பெரும் துயரத்தில் சிக்கியபோது, மக்களோடு மக்களாக இருந்தாா். தமிழக முதல்வா் சொல்லும் கட்டளைகளை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க முதல்வா் ஆலோசனைப்படி மக்களுடன் மக்களாக களத்தில் நின்று கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் மக்கள் தேவைகளை பூா்த்தி செய்து வந்தனா்.

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் இன்னும் உயா்ந்த நிலையை அடையும். தமிழக முதல்வரின் திட்டங்களை இந்திய மாநிலங்கள் மட்டுமன்றி உலக நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன.

குறிப்பாக முதல்வரின் காலை உணவு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமன்றி வெளிநாடுகளும் இந்தத் திட்டத்தை பின்பற்ற தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வா் வழியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவில் நலிந்த திமுகவினா் மற்றும் பொதுமக்களுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டை ஊக்குவிக்க பரிசுத் தொகை மற்றும் பரிசு கோப்பைகள், அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச்,டெஸ்க் போன்ற கல்வி உபகரணங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் மாணவா்களின் எதிா்கால கல்வி வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அமைக்கப்பட்ட நூலகங்களுக்கு நூல்களை வாங்கி கொடுத்து அவா்களால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com