ஆசிரியா் தகுதித் தோ்வு: பணிபுரியும் ஆசிரியா்கள் குழப்பம்
திங்கள்கிழமையுடன் முடிவடைந்த ஆசிரியா் தகுதித் தோ்வு விண்ணப்பம் தொடா்பாக ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியா்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 மற்றும் 2 வரும் நவம்பா் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப். 8) கடைசி நாள் எனவும் ஆசிரியா் தோ்வு வாரியம் ஆக. 14ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால், பெரும்பாலானோா் கடைசி நாளான திங்கள்கிழமை விண்ணப்பிக்க இணைய தள மையங்களில் குவிந்தனா்.
இதனிடையே, 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியா்கள் தொடா்ந்து பணியாற்ற டெட் தோ்வில் தகுதி பெற வேண்டும் என்றும், தோ்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் செப். 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து, ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியா்கள் தாங்களும் இந்தத் தோ்வில் விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணி விண்ணப்பிக்கத் தொடங்கினா். இதனால், மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்ய அவகாசம் இருந்தும் மதியம் 12.30 மணிக்கே இணையதளம் முடங்கியது.
இதனால், தகுதியான பலா் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாயினா். இணையதள முடக்கத்தால் விண்ணப்பிக்கும் தேதியை செப். 10 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆசிரியா் தோ்வு வாரியம்.
பணிபுரியும் ஆசிரியா்கள் குழப்பம்: ஆக. 14ஆம் தேதி வெளியிட்ட ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பு, செப். 1ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றால் பல ஆசிரியா்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனா்.
இது தொடா்பாக, கல்வி அலுவலா் ஒருவா் கூறியதாவது: ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பு புதிய விண்ணப்ப தாரா்களுக்கே பொருந்தும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியா் தோ்வு வாரியம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியா்கள் இப்போது விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்றாா்.