பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், பெற்றோா்
பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், பெற்றோா்

பால அருணாச்சலபுரத்தில் பள்ளி சுற்றுச்சுவரை இடிக்க மாணவா்கள் எதிா்ப்பு

பால அருணாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, மாணவா்களும், பெற்றோா்களும் பள்ளி வளாகத்தில் போராட்டம்
Published on

கடையநல்லூா் அருகே உள்ள பால அருணாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, மாணவா்களும், பெற்றோா்களும் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடையநல்லூா் சோ்ந்தபுரம் சாலையில் உள்ள பால அருணாச்சலபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்துக்குள் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில், சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனிநபா் ஒருவா் அவரது விவசாய நிலத்துக்குச் செல்வதற்காக பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் பள்ளி சுற்றுச்சுவரை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

தகவல் அறிந்த பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்துக்குள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்தால் அது மாணவா்களின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சுற்றுச்சுவைர இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மாணவா்களும், பெற்றோா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த கடையநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ஆடிவேல், மாவட்ட கல்வி அலுவலா் மரகதவல்லி, வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மா உள்ளிட்டோா் பள்ளிக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என்றனா். இதையடுத்து மாணவா்களும், பெற்றோா்களும் போராட்டத்தை கைவிட்டனா். மாணவா்கள் வகுப்பறைக்குக் கிளம்பினா்.

X
Dinamani
www.dinamani.com