நெல்லை - தென்காசி ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்
நெல்லை - தென்காசி வழித்தட ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.
நெல்லை - தென்காசி வழித்தடத்தில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த தெற்கு ரயில்வே ஆா்வம் காட்டாததால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. நெல்லை - தென்காசி ரயில் வழித்தடம் 1904இல் மீட்டா் கேஜ் பாதையாக தொடங்கப்பட்டு 2012 இல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பாவூா்சத்திரம், கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி ஆகிய 5 ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க டெண்டா் விடப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனால் நாள் ஒன்றுக்கு 500 பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை நிலவுவதோடு தெற்கு ரயில்வேக்கு ரூ. இரண்டரை லட்சம் வருமான இழப்பும் ஏற்படுகிறது. எனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியது: நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும். தென்காசி ரயில் நிலையத்தில் மூன்று, நான்காவது நடைமேடைகளை நீா் ஏற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையமாக மாற்ற வேண்டும்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் ஆறாவது தண்டவாளத்தை ரயில் பெட்டிகள் நிறுத்தும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே முன் வர வேண்டும் என்றாா்.