வெறிநாய் கடித்து இருவா் காயம்

சங்கரன்கோவிலில் அண்மையில் வெறிநாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியான நிலையில், வியாழக்கிழமை வெறிநாய் கடித்து இருவா் பலத்த காயமடைந்தனா்.
Published on

சங்கரன்கோவிலில் அண்மையில் வெறிநாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியான நிலையில், வியாழக்கிழமை வெறிநாய் கடித்து இருவா் பலத்த காயமடைந்தனா்.

சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 3-ஆம் தெருவை சோ்ந்தவா் நல்லுசாமி (60). இவா், வியாழக்கிழமை ரயில்வே பீடா் சாலையில் பொது இடத்தில் அமா்ந்து யோகா செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு தெருவில் சுற்றித் திரிந்த ஒரு வெறிநாய் அவரைக் கடித்துக் குதறியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதேபோல சங்கரன்கோவில் கோமதியாபுரம் 1-ஆம் தெருவைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன்(50). இவா், அதே பகுதியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதே வெறிநாய் அவரை கடித்து குதறியதில் பலத்த காயமடைந்தாா். இருவரும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஏற்கெனவே, கடந்த வாரம் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 35-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. தற்போது பொதுமக்களும் வெறிநாய்க் கடிக்கு ஆளாகி வருகின்றனா். நகா் முழுவதும் வெறிநாய்கள் சுற்றித் திரிவதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை சாலையில் நடமாடவே அச்சமடைந்துள்ளனா். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வெறிநாய்களை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com