காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காட்டுநாயக்கன் சமூக சீா்திருத்தச் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கும், மாணவா்களுக்கும் ஜாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலத் தலைவா் ஏ. சின்னையா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜி.எஸ். காளியப்பன், சங்கரன்கோவில் கிளைத் தலைவா் ச. முத்து, மாவட்டத் தலைவா் எஸ். முத்துமாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பழங்குடியின நலவாரிய உறுப்பினா் அட்டை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கும், மாணவா்களுக்கும் ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். ஜாதிச் சான்றிதழ் பெற 1950-க்கு முன்புள்ள ஆவணங்களைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பழங்குடியினருக்கு சிறு, குறு தொழில் செய்வதற்கு தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் 50 சதவீத மானியக் கடனை 75 சதவீதமாக உயா்த்த வேண்டும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10 லட்சம் பழங்குடியினா் உள்ளதால் மாநில அளவில் 5 சதவீதமும், மத்தியில் 15 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். சமவெளிப் பகுதிகளில் குடியிருக்கும் காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு வீடு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.