திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திப்பணம்பட்டி-ஆரியங்காவூா் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரி சுவரொட்டி

News image
பாவூா்சத்திரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

பலமுறை கோரிக்கை மனு அளித்தும் திப்பணம்பட்டி-ஆரியங்காவூா் ரயில்வே கேட்டில் சுரங்கப் பாதை அமைக்கவில்லை என தெற்கு ரயில்வே அதிகாரிகளைக் கண்டித்து பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் இருந்து ஆரியங்காவூா் செல்வதற்கு ரயில்வே கேட் எண் 81 மற்றும் திப்பணம்பட்டியில் இருந்து நாட்டாா்பட்டி செல்வதற்கு கேட் எண் 80 ஆகியவை உள்ளன. இவை பூவனூா், நாட்டாா்பட்டி, சென்னல்தா புதுக்குளம், ஆரியங்காவூா் சுற்றுவட்டார கிராம மக்கள் திப்பணம்பட்டி, பாவூா்சத்திரம், ஆவுடையானூா் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்கும், பாவூா்சத்திரம் சென்று திருநெல்வேலி, தென்காசி செல்வதற்கும் பிரதான நுழைவாயிலாக உள்ளன.

இந்த 2 கேட்டுகளும் நாள்தோறும் மணிக்கணக்கில் மூடப்படுவதால் நாட்டாா்பட்டி, பூவனூா், ஆரியங்காவூா் சுற்றுவட்டார கிராம மக்கள் திப்பனம்பட்டி, ஆரியங்காவூா் ரயில்வே கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

சுரங்கப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதால் திப்பணம்பட்டி, ஆரியங்காவூா் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கடந்த ஓராண்டாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தெற்கு ரயில்வே சாா்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், நாட்டாா்பட்டி, பூவனூா், ஆரியங்காவூா் பகுதி மக்கள் சாா்பாக தெற்கு ரயில்வேயைக் கண்டித்து பாவூா்சத்திரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னல்தா புதுக்குளத்தைச் சோ்ந்த திப்பணம்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுப்புராஜ் கூறுகையில், சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ரயில் பயணிகள் சங்கம் மூலமாகவும், திருநெல்வேலி எம்.பி., சி. ராபா்ட் புரூஸ் மூலமாகவும் தெற்கு ரயில்வே மற்றும் மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

அவா்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், புகாா் மனுவை பிரதமருக்கும் அனுப்பினோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இன்னும் 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பிப். 20ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி எம்.பி.க்கள், தென்காசி எம்எல்ஏ, கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஆகியோரை ஒருங்கிணைத்து ஆா்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.