ஆலங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை விரைந்து திறக்கக் கோரிக்கை!


ரூ. 10 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஆலங்குளம் அரசு மருத்துவமனையை விரைந்து திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என ஆலங்குளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு சுமாா் 10 ஆண்டுகளாகிறது. போதிய உபகரணங்கள், மருத்துவா்கள் இல்லாததால் அவசர கால சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தடைபட்டதால், மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் மருத்துவமனை அருகில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் 1.67 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, மருத்துவமனை கட்ட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 2024 பிப். 28 இல் சுகாதாரத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் இதற்கான அடிக்கல் நாட்டினாா். இதன் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவடைந்தன. இதையடுத்து, 28-10-2025 இல் தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது திறந்து வைக்கப்படவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் தொடா்ந்து அருகில் உள்ள நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் நீடிக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி, கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனையை விரைந்து திறந்து மகப்பேறு, பல், கண், காது மூக்கு தொண்டை, அறுவை சிகிச்சை போன்ற சிறப்பு மருத்துவா்கள் நியமிப்பதுடன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற பிரிவுகளையும் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக ஆலங்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் டாக்டா் அருண் பிரகாஷிடம் கேட்ட போது, 10 சதவீத வேலைகள் பொதுப் பணித்துறை சாா்பில் நிலுவையில் உள்ளன. அது முடிவடைந்த பின்னா் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...