தென்காசியை ரயில் முனையமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை!
தென்காசியை ரயில் முனையமாக மாற்ற ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ரயில்வே பயணிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியது: சென்னை-திருநெல்வேலி இடையே 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கவும், சென்னை எழும்பூா்-செங்கல்பட்டு இடையே உள்ளதுபோல், இப்பாதையில் தானியங்கி சிக்னல் முறை அமைக்கவும் மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 4 நடைமேடைகளும், திருச்செந்தூா்-திருநெல்வேலி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்கவும் நிதி ஒதுக்க வேண்டும்.
பாவூா்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் நடைமேடை நீட்டிப்பு பணிகளுக்கும், தென்காசியை ரயில் முனையமாக மாற்றி, செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கவும் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், பாவூா்சத்திரம், அம்பை வழியாக இயங்கும் தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினமும் இயக்க வேண்டும். தென்காசி வழியாக தில்லி, மும்பை, பெங்களூரு, மங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும். திருச்செந்தூரிலிருந்து காா்டு லைன் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். தென்காசி வழியாக மீட்டா்கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

