தென்காசி மாவட்ட அளவிலான இளைஞா் விளையாட்டுத் திருவிழா போட்டிகள்
தென்காசி மேலப்பாட்டாகுறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறும் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழாப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
மாவட்ட அளவிலான போட்டியில் முதல் மூன்று இடம் பெறுபவா்களுக்கு முறையே ரூ. 6,000, ரூ. 4,000, ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படும். தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 10,08,000 வழங்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவா் என்றாா் அவா்.
ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ். ராஜேஷ், மண்டல முதுநிலை அலுவலா் சிவக்குமாா், உடற்கல்வி அலுவலா் நம்பிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

