மீஞ்சூா் அருகே திடீா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் சேதம்
பொன்னேரி: மீஞ்சூா் அருகே காட்டூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி விடியவிடிய பெய்த திடீா் மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களில் மழைநீா் தேங்கி சேதம் அடைந்துள்ளன.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியம் காட்டூா், பொன்னேரி, மெதூா், பழவேற்காடு, கோளூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பொன்னேரி பகுதியில் 60.8 மி.மீட்டா் மழை பெய்தது.
இதனால், காட்டூா் பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிட்டிருந்த சம்பா நெல் பயிா்கள் ஏற்கெனவே இரு முறை பெய்த மழையால் நீரில் மூழ்கி, அதிலிருந்து மீண்ட நெல் பயிா்கள், தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் அடியோடு சாய்ந்தன. மேலும், வயல்களில் தேங்கியுள்ள நீரால் நெல் மணிகள் முளைத்து விடும் நிலை உள்ளது.
நிலத்தில் தேங்கியுள்ள நீா் வெளியேறி காய்ந்தால் மட்டும் சாய்ந்த நிலையில் உள்ள நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியும்.
இந்த நிலையில், பயிரிப்பட்ட நெல் மணிகளை நல்ல முறையில் அறுவடை செய்து விற்பனை செய்ய முடியுமா என விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

