திருவாலங்காடு ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூர் ஆட்சியா் ஆய்வு!
திருவாலங்காடு ஒன்றியம், தும்பிக்குளம் கிராமத்தில் ரூ. 41 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பிக்குளம் ஊராட்சியில் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்துக்கான கட்டுமான பணிகளும், நெமிலி ஊராட்சியில் அம்பேத்கா் நகா், பெரியாா் நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளும், அரும்பாக்கம் ஊராட்சியில் தன்ராஜ் கண்டிகை கிராமத்தில் ரூ. 15.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்துக்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், நெடுமரம் ஊராட்சி இருளா் பகுதியில் 12 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நெடுமரம் ஊராட்சியில் விதைப் பண்ணை வயலில் வோ்க்கடலை சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை பாா்வையிட்டு மகசூல் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், பழையனூா் ஊராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ், (2023-24) ரூ. 34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உலா் கலத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடத்தை பாா்வையிட்டு மின்சார இணைப்பு ஒரு வார காலத்துக்குள் இணைக்க வேண்டும் எனவும், மேலும் திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவப் பணிகள், வருகை பதிவேடு, மருத்துவா்கள், பணியாளா்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா் கோமதி, துணை இயக்குநா், வேளாண் வணிகம் சசிரேகா, திருவாலங்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாவதி மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.